திருப்பூரில் மது குடிக்காதே என்று கண்டித்த மனைவி மீது தீ வைத்த கணவர்
திருப்பூர்: மது குடிக்க வேண்டாம் என்று கண்டித்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி(32). தாராபுரத்தில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். குடிப்பழக்கம் உள்ளவர். அவரது மனைவி பிரியா(22). அவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக சின்னத்தம்பி அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடம் தகராறு செய்வார். மது குடிக்க வேண்டாம் என்று பிரியா எவ்வளோ சொல்லியும் அதை அவர் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி நாற்காலியில் உட்கார்ந்திருந்த பிரியா மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.
உடல் முழுவதும் தீப்பிடித்ததில் பிரியா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு குற்றவியல் நீதிபதி ஸ்ரீராமஜெயம் பிரியாவிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். பின்னர் பிரியா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற சின்னத்தம்பி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications