மலேசியாவுக்குள் மகிந்த ராஜபக்சேவை கால்வைக்க விடக் கூடாது: கொந்தளித்த தமிழர்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற உள்ள இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு டிசம்பர் 4 முதல் 6-ந் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து அம்பாங்கில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இன்று பல்வேறு மனித உரிமைகள் அமைப்பினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமக்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்க மலேசிய அரசு திட்டமிட்டிருப்பது இந்நாட்டில் வாழும் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல். மகிந்த ராஜபக்சேவை அழைத்திருப்பது இந்தியர்களை அவமதிப்பதாகும்.
மகிந்த ராஜபக்சேவை இந்த நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவரை உள்ளே அனுமதித்தால் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
மற்றொரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினரான ராஜரெத்தினம் கூறுகையில், பாலஸ்தீனத்து மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்போது பிரதமர் நஜிப் கண்டனம் தெரிவிக்கிறார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மெளனம் காக்கிறார். இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒன்றுதான். மலேசியாவுக்கு நெதன்யாகு வரக் கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் அனைத்தும் ராஜபக்சேவுக்கும் பொருந்தும் என்றார்.
மேலும் மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஐ.சி. சார்பில் காவல்துறையிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications