கசாப் தூக்கிலிட்டதை லட்டு கொடுத்து கொண்டாடிய 'பாகிஸ்தான்'!
கசாப் தூக்கிலிடப்பட்டதை ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இறுக்கமாக இருந்து அமைதி காத்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் என்ற பெயரில் அமைந்த கிராமத்தில் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை விநியோகித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் அக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
மிகவும் சிறிய கிராமம் இது. இந்தக் கிராமத்தின் பெயர்தான் பாகிஸ்தான். இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. மொத்தம் 35 வீடுகளே இந்த கிராமத்தில் உள்ளது. மக்கள் தொகையும் 250 பேர்தான்.
கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் இந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரும் குதூகலமடைந்தனர். காரணம், தங்களது கிராமப் பெயரால் இவர்கள் படாதபாடு பட்டு வருகின்றனராம். பாகிஸ்தான் என்ற பெயரில் கிராமம் இருப்பதால் இந்த மக்களுக்கு எங்கு போனாலும் கேலியும், கிண்டலும்தான் அதிகம் கிடைக்கிறதாம்.
மேலும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தக் கிராம மக்களும் கடும் அவஸ்தைக்குள்ளாகியிருந்தனர். இந்த நிலையில் கசாப் தூக்கிலிடப்பட்டதை இவர்கள் விழா போல கொண்டாடி தேசப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
இனிப்புகளை விநியோகித்தும், பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடியுள்ளனர். பலர் வீடுகளில் சிறப்பு சாப்பாடு சமைத்து அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்தனராம்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் எங்களது கிராமத்தின் பெயரை மாற்ற தீர்மானித்தோம். ஆனால் பின்னர் அந்த முடிவை கைவிட்டு விட்டோம் என்றார்.