உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலை கட்டும் துபாய்
துபாய்: உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே எக்கச்சக்க மால்கள் உள்ள துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டப்படும் என்று மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார். துபாய் நகரில் முகமது பின் ராஷித் சிட்டியை உருவாக்கவிருக்கின்றனர். மேலும் புதிய குடியிருப்புகளும் கட்டப்படவிருக்கின்றன.
இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள துபாய் மால் உள்ளிட்ட மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் சுற்றுலாத்துறை ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அங்குள்ள ஹோட்டல்களின் வருவாய் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாயின் வளர்ச்சிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்துவது அவசியம் என்று மன்னர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications