மகன் கடனை செலுத்தாட்டி உன்னைக் கடத்திருவோம்... 81 வயது பாட்டியை மிரட்டிய வங்கி ஏஜென்டுகள்!
மும்பை: உன் மகன் வாங்கிய ரூ. 96,000 கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் உன்னைக் கடத்திக் கொண்டு போய் விடுவோம் என்று 81 வயது பாட்டியை மிரட்டி படு கேவலமாக நடந்து கொண்டுள்ளனர் ஒரு வங்கியின் கடன் மீட்பு ஏஜென்டுகள். அந்தப் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் தறபோது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்,.
மகாராஷ்டிர மாநிலம் மரோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பண்டர்கர். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கு கடந்த 2 மாதங்களாக ஒரு வங்கியின் கடன் மீட்புப் பிரிவு பெண்களிடமிருந்து கிட்டத்தட்ட 1500 தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பேசிய அனைவருமே என்னை கடுமையாக திட்டினர், அவதூறாகப் பேசினர். எனது மகன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் உன்னை கடததிக் கொண்டு போய் விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர். எனது மகனுடைய சக ஊழியர்களையும் அவர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர் என்று கூறியிருந்தார் லட்சுமி பண்டர்கர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் சம்பந்தப்பட்ட கடன் மீட்புப் பிரிவுக்குப் போன் செய்து பார்த்தனர். அப்போது அதில் பேசிய நபர்கள், போலீஸார் என்று தெரியாமல் மிகக் கடுமையாக மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளனர். இதனால் கோபமடைந்த போலீஸார், உடனடியாக சம்பந்தப்பட்ட கடன் மீட்பு ஏஜென்சி மீது வழக்குப் போட்டுள்ளனர்.
தனது நிலை குறித்து லட்சுமி பண்டர்கர் கூறுகையில், அவர்கள் பேசிய பேச்சுக்கள் மிகவும் அசிங்கமானவை. ஏன் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றாய் என்றெல்லாம் கேட்கிறார்கள். எனது மகன் வரதராஜ், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் தலைமை நிதி அதிகாரியாக இருக்கிறார். அவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அங்கேயே வேலையும் பார்த்து வருகிறார் என்றார்.
இந்த விவகாரம் குறித்து வரதராஜ் கூறுகையில், நான் இந்தக் கடன் தொடர்பாக வங்கிக்கு உரிய முறையில் விளக்கம் அளித்து கடிதமும் கொடுத்துள்ளேன். அப்படியும் விடாமல் எனது தாயாரையும் எனது நண்பர்களையும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். என்னையும் தொலைபேசியில் அழைத்து அசிங்கமாகப் பேசுகின்றனர்.
உணமையில் இந்த ரூ. 96,000 கடன் பாக்கி என்பதே வங்கியின் தவறால் வந்ததுதான். இந்தப் பணத்தைக் கூடவா கட்ட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். இது மிக மிக சொற்பமான தொகை. ஆனால் வங்கி செய்த தவறால்தான் நான் பணம் கட்ட மறுத்து வருகிறேன் என்றார்.
சம்பந்தப்பட்ட வங்கி இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட வங்கியாகும்.
இந்த தனியார் வங்கிக் குண்டர்களின் தொல்லைக்கு எப்போதுதான் அரசு முடிவு கட்டப் போகிறதோ...












Click it and Unblock the Notifications