ரூ.20 கோடி மோசடி புகார்: திமுக எம்.பி. ஜேகே ரித்தீஷ் சென்னையில் கைது

சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் ராஜசேகர். சென்னையில் பிரபலமான ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அவர் கடந்த 20ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து திமுக எம்.பி. ஜே.கே. ரித்தீஷ் மீது மோசடி புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், 2006ம் ஆண்டு எனது தந்தை முருகேசனிடம் ரித்தீஷ் எம்.பி. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 20 கோடி வாங்கினார். ஆனால் கூறியபடி நிலத்தை வாங்கித் தரவில்லை. இதற்கிடையே எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு நான் சென்று அவரிடம் பணம் கேட்டேன். அப்போது வேறு பகுதியில் இடம் வாங்கி தருகிறேன் என்றார். நானும் ஒப்புக் கொண்டேன்.
ஆனால் இதுவரை இடமும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ரித்தீஷ் கூறுகையில்,
நானும் ராஜசேகரின் தந்தையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பல கோடி ரூபாய்க்கு தொழில் செய்தோம். இந்நிலையில் இடப் பிரச்சனையில் சில குளறுபடி இருந்ததால் காலதாமதம் இருந்தது. இதை காரணம் காட்டி சிலர் தூண்டுதலால் ராஜசேகர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அதை சட்டப்படி சந்திப்போம் என்றார்.
இந்நிலையில் ராஜசேகரின் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரித்தீஷை சென்னையில் வைத்து கைது செய்தனர். இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications