ரயில் நீர் ஒரு லிட்டர் ரூ.15; உணவுப் பொருட்களின் விலையும் திடீர் உயர்வு

"ரயில் நீர்' 1லிட்டர் ரூ.15
இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான ரயில் நீர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், விற்பனை செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் விலையை உயர்த்த, ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் ரயில் நீர் விலை, ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோன்று, 500 மில்லி லிட்டர் குடிநீரின் விலை ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த புதிய விலை உயர்வு விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இந்நிறுவனத்திற்கு, சென்னை அருகே உள்ள பாலூர், தில்லியில் நங்லோய், பிகாரில் தனபூர் ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகள், நாளொன்றுக்கு ஒரு லிட்டர் அளவிலான, குடிநீர் அடைக்கப்பட்ட 3.80 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
ரயில்வே நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு -ரயில் நீர்-ஏற்கெனவே விற்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.12-க்கு விற்பனை செய்ய வேண்டிய ரயில் நீர் பாட்டில் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இனி அதிகாரப்பூர்வமாக ஐ.ஆர்.சி.டி.சி ரயில்நீரின் விலையை உயர்த்தினால் விற்பனையாளர்கள் அதிக விலை வைத்து விற்பனை செய்வார்கள் என்பது பயணிகளின் அச்சம்.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு
இதனிடையே தொலைதூரம் செல்லும் ரயில்களிலும் காலை நேர ரயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் திடீரென உயர்ந்துள்ளன. ரயில்களில் சமையலுக்கென பிரத்யேகமாக உள்ள பெட்டிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விட்டுள்ளது.
ரயிலில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு காபி 5ரூபாய்க்கும் சூப் 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தன. ஆனால், திடீரென ஒரு காபி 10 ரூபாயாகவும்,சூப் 20 ரூபாயாகவும் உயர்ந்து பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
20 ரூபாய்க்கு மூன்று பஜ்ஜிகள் விற்பனை செய்யப்பட்டன. இப்போது இரண்டு பஜ்ஜி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ப்ரெட் ஆம்லெட் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு மடங்கான உணவுப் பொருட்கள்
35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெஜிடபிள் பிரியாணி ரூ.60-க்கும் அசைவ பிரியாணி வகைகளும் வழக்கமான விலையைவிட ரூ.25 முதல் ரூ.35 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் செல்லும் ஏழை மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் அதிகம்
இதேபோல் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள உணவுக் கடைகளில் புதிய விலை உயர்வுக்கான பட்டியல் வைக்கப்படவில்லை.
இந்த திடீர் உயர்வினால் தொலை தூரம் பயணம் செய்யும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு இருமடங்கானாலும் உணவுப் பொருளின் தரம் சரியில்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இது குறித்து பல முறை ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்திடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications