திருவண்ணாமலை கோவிலில் பசங்க பாண்டிராஜுக்கு சுதந்திர அனுமதி...ஆதீனத்திற்கு 'ஸ்டாப்'!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடந்த கார்த்திகை திருவிழாவின்போது ஆதீனம் ஒருவர் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதைக் காணவ வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி பயங்கர கெடுபிடி செய்தனர். ஆனால் சினிமாப் பட இயக்குநர் பாண்டிராஜ் மட்டும் படு சுதந்திரமாக கோவிலுக்குள் வலம் வந்து திவ்ய தரிசனம் கண்டார்.
திருவண்ணாமலையில் நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் அங்கு குவந்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஆதீனம் தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். ஆனால் அவரது காரை போலீஸார் திருவண்ணாமலைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. மாறாக இங்கிருந்து நடந்து போங்கள் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு சமாச்சாரத்தைக் கூறினார். உடனடியாக விரைந்து வந்த இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆதீனத்தை உள்ளே விட்டனர்.
ஆனால் வடக்குக் கோபுரம் வழியாக அவரை அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் சாதாரண மக்கள் செல்லும் வழியாக நடந்தே போனார். ஆனாலும் கோவிலுக்குள் அவரை விடவில்லை. மறுபடியும் இந்து மத அமைப்புகள் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார்கள்.
இதை அறிந்து ஐஜி கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார்.அனைவரிடமும் பாஸ் இருப்பதை கண்ட அவர், அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆதீனம் உள்ளிட்டோர் உள்ளே போனார்கள்.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம், பசங்க சினிமாப் பட இயக்குநரான பாண்டிராஜ், கோவிலுக்குள் எந்தவிதக் கெடுபிடியும் இல்லாமல் படு சுதந்திரமாக வலம் வந்து திவ்ய தரிசனம் செய்தார். அவரை யாரும் எந்த இடத்திலும் தடுத்ததாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications