காவிரிப் பிரச்சனை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று கர்நாடக முதல்வரை சந்திக்கும் ஜெ.

காவிரி பிரச்சனை குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூர் செல்கிறார். இந்நிலையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா ஷெட்டரை சந்திக்கையில் முன்வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகள், சம்பா பயிர்களை காப்பதற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம், காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி கர்நாடகம் காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை வழக்குரைஞர், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாளை கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக காவிரி பிரச்சனை குறித்து கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் வைத்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் ஜே.ஹெச். பட்டேலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இன்று தான் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications