நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகார வழக்கில் இருந்து அமைச்சர் பழனிச்சாமி பெயரை நீக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமியின் பெயரை நீக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள எக்சல் என்ஜினியரிங் என்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது,
எங்கள் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறது. ரூ. 5 கோடிக்கு மேலாக டெண்டர் எடுத்து பணியை சிறப்பாக செய்துள்ளது. கடந்த 19ம் தேதி சென்னை டிவிஷனின் 8 சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. அதில் எங்கள் நிறுவனம் 5 டெண்டரில் கலந்து கொண்டு விண்ணப்பித்தது.
ஆனால் இதற்கான அனுபவச் சான்றிதழையும், தரச் சான்றிதழையும் அரசு எமக்கு கொடுக்க தாமதப்படுத்தியது. இதனால் எம்மால் விண்ணப்பத்துடன் இந்த சான்றிதழ்களை இணைக்க முடியவில்லை. மேலும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமி தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்று 5 பேரை பரிந்துரை செய்துள்ளார்.
எனவே, அவர் தூண்டுதலின்பேரில் அவர் கூறும் 5 நபர்களுக்கு டெண்டர் கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் அனைத்து தகுதியும் இருந்தும் எங்களுக்கு டெண்டர் தராமல் நிராகரிப்படும் நிலை வருமோ என பயப்படுகிறோம்.
எனவே, எங்கள் டெண்டரை நிராகரிக்கக் கூடாது. மேலும் அமைச்சர் பழனிச்சாமி பரிந்துரைத்த 5 பேருக்கு அனுபவ சான்றிதழ் இல்லை. தரச் சான்றிதழும் இல்லை. அதனால் அவர்களுக்கு டெண்டர் கொடுக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவனீதகிருஷ்ணன் ஆஜராகி, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பெயரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதனால் இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரண்டு வாரத்தில் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications