தயாநிதி அழகிரியின் முன் ஜாமீன், பிடிவாரண்ட் ரத்து மீதான தீர்ப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மதுரை: கிரானைட் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் திமுக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதியின் முன் ஜாமீன் மனு மற்றும் பிடிவாரண்ட் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடிகளால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, தொழில் அதிபர் ராஜசேகர் போன்ற பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பி.ஆ.ர்.பி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபர் ராஜசேகர் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் தயாநிதி அழகிரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தயாநிதி அழகிரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணையில் இருந்த போது கீழவளவு போலீசார் மேலூர் நீதிமன்றத்தில் தயாநிதி அழகிரியை கைது செய்ய பிடிவாரண்ட் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தயாநிதி அழகிரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தயாநிதி அழகிரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வம் பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதே போல் தயாநிதி அழகிரியின் முன் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications