6 ஊழியர் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் தருகிறோம்-பிரதீபா காவிரி கப்பல் நிர்வாகம்
சென்னை: நிலம் புயலில் சிக்கி, கடலில் விழுந்து உயிரிழந்த மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்துக்குச் சொந்தமான பிரதீபா காவிரி கப்பல் ஊழியர்கள் 6 பேரின் குடும்பங்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அந்த கப்பல் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலம் புயல் காரணமாக சென்னைக்கு அருகே கரை ஒதுங்கிய பிரதீபா காவிரி கப்பலில் இருந்து குதித்து 6 ஊழியர்கள் பலியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கப்பல் உரிமையாளர் சுனில் பவார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த 6 ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக அளிக்க தயாராக இருப்பதாகவும், அந்த தொகைக்கான காசோலையை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் விரைவில் அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதியிடம், கப்பலை விற்பனை செய்து அதன் மூலம் வரும் தொகையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கும் வகையில், கப்பலை விற்பனை செய்வதற்கு நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கப்பல் நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது, இந்த வழக்கில் இதுவரை காவல்துறையினர் நடத்தியுள்ள விசாரணை நிலவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கப்பல் உரிமையாளர் சுனில் பவார் மீது 307 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காவல்துறையினர், இந்த வழக்கின் கீழ் தன்னை கைது செய்யாமல் இருக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் சுனில் பவார் முன்ஜாமீன் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications