நாடாளுமன்ற தேர்தலில் பாமக 10 இடங்களை கைப்பற்றும்: ஜி.கே. மணி சொல்றார்

நெல்லை, குமரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார். துணை தலைவர் மோகன்ராஜ், துணை பொதுச் செயலாளர்கள் வியனரசு, திருமலைக்குமாரசாமி யாதவ், அரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர்.
பின்னர் ஜி.கே. மணி பேசுகையில்,
மதுப் பழக்கத்தால் உயிர் இழப்பு, இளம்பெண்கள் தற்கொலை, சாலை விபத்து, கல்வி, பொருளாதார பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டிசம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கும். தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு அமலில் உள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக மின்வெட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண தற்காலிகமாக மத்திய மின்தொகுப்பு, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும். மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்பந்த காலம் முடிந்தும் மின் உற்பத்தி துவங்கவில்லை. ஒப்பந்தப்படி மின் உற்பத்தியை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் உற்பத்தி நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்துவது, பழுதடைந்த நிலையங்களை சீர் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள என்ஜினியர்கள் குழுவை அரசு அமைக்க வேண்டும். பருவமழை பொய்த்துள்ளதால் ஏரிகள், குளங்களில் நீர் இல்லை. மாநிலம் முழுவதும் விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை சீர்செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். மதுரை, நெல்லை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கை காட்டுகிறது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாய மக்கள் குறித்து தவறான தகவல் இடம் பெற்றதை கண்டித்து முதலில் குரல் கொடுத்தவர் தலைவர் ராமதாஸ். முதலில் போராட்டம் நடத்திய கட்சி பாமக. மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற நாடார் மக்கள் குறித்த தவறான தகவல்களை உடனே நீக்க வேண்டும்.
சமுதாய மோதல்களை போலீசார் விசாரிக்கும்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் நாம் தமிழர்கள், சகோதரர்கள் என்ற உணர்வுடன் விளங்க வேண்டும். 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெறுவோம். 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் பாமகவுடன் சமூக இயக்கங்கள், அமைப்புகள் கைகோர்க்க வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications