பள்ளி வயதிலேயே கிரிமினல்தனம்... கண்டக்டரை காம்பஸால் குத்திய மாணவன்!
சென்னை: பஸ்ஸில் புட்போர்டில் தொங்கிக் கொண்டு வந்ததைத் தட்டிக் கேட்டதாலும், தன்னை போலீஸில் பிடித்துக் கொடுத்ததாலும் கோபமடைந்த பள்ளிக்கூட மாணவன் ஒருவன் கண்டக்டரை காம்பஸால் குத்திக் காயப்படுத்திய சம்பவம் பொதுமக்களை அதிர வைத்துள்ளது.
பள்ளிக் கூட வயதிலேயே இந்த சிறுவன் இப்படிச் செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தலைநகர் சென்னையில் இந்த சம்பவம்.
விவேகானந்தர் இல்லம் டூ கொருக்குப்பேட்டைக்குச் செல்லும் 32 பி பஸ் நேற்று வழக்கம் போல கிளம்பியது. கண்டக்டராக பெருமாள் என்பவர் இருந்தார்.
குறளகத்திற்கு அருகே பஸ் வந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் அதில் ஏறினர். ஆனால் உள்ளே வராமல் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணித்தனர். இதைப் பார்த்த பெருமாள் உள்ளே வருமாறு கூறினார். அவர்களோ கண்டக்டரிடம் மோசமான வார்த்தைகளைப் பேசி வாக்குவாதம் செய்தனர்.
இதனால் கோபமடைந்த கண்டக்டர் பஸ்சை நிறுத்தி ஒரு மாணவனைப் பிடித்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் ஒப்படைத்தார். போக்குவரத்துக் காவலர் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து ஒழுங்கா இரு என்று கூறி அனுப்பினார். விடுபட்டு வந்த அந்த மாணவன் வேகமாக ஓடி வந்து அதே பஸ்சில் ஏறினான்.
மறுபடியும் கண்டக்டரிடம் கோபத்துடன் பேச ஆரம்பித்தான். பின்னர் தனது ஜாமென்ட்ரி பாக்ஸில் வைத்திருந்த காம்பஸை எடுத்து கண்டக்டரை சரமாரியாக குத்த ஆரம்பித்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், கையால் தடுத்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவன் தப்பி ஓடி விட்டான்.
இதைப் பார்த்து பஸ்சில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்து போய் விட்டனர். ஆனால் வழக்கம் போல யாரும் தடுக்கத்தான் முன்வரவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications