ஒரு மனைவி, 2 கள்ளக்காதலிகள்... கடைசியில் கொலை முயற்சி!
திருவையாறு: திருவையாறு அருகே மனைவியை விட்டு விட்டு இன்னொரு பெண்ணுடன் வாழச்சென்றவர், அந்தப் பெண்ணுடனும் வாழாமல் மேலும் ஒரு பெண்ணிடம் போனார். அதற்கும் பிரச்சினை வர மறுபடியும் தனது முதல் கள்ளக்காதலியிடமே திரும்பி வந்தார். வந்தவர், தனது முதல் கள்ளக்காதலிதான் இந்த நிலைக்குக் காரணம் எனக் கருதி அவரை பைக் ஏற்றிக் கொல்ல முயன்று இப்போது கைதாகியுள்ளார்.
திருவையாறு அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியய்யா. இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்த்து வந்த சூளையில் வேலை பார்த்தவர் மேகலா. இருவருக்கும் தனித் தனியாக கல்யாணமாகி குடும்பத்துடன் இருந்து வந்தவர்கள். ஆனால் வேலைக்கு வந்த இடத்தில் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் மேகலா கசந்து போனார். இதையடுத்து பக்கத்திலேயே இன்னொரு பெண்ணுக்கு வலைவீசி அந்தப் பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பெண்ணின் ஊரைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார், தங்களது மகளை மாரியய்யா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதற்கு மாரியய்யா மறுத்து விட்டார். இதனால் பெண்ணைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மறுபடியும் மேகலாவிடமே வந்தார். வந்தவர், கோபம் கொண்டார், எல்லாம் உன்னால்தான் கெட்டது என்று கோபத்துடன் சண்டை போட்ட அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து மேகலா மீது ஏற்றினார். இதில் மேகலா படுகாயமடைந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது மாரியய்யாவைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.