ஆர்.பி.சிங் விவகாரம்- பார்லி. பொதுக் கணக்கு குழுவை கூட்டுக: திமுக
டெல்லி: 2ஜி தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
2ஜி ஒதுக்கீட்டில் ரூ1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்பது சிஏஜி அறிக்கை. ஆனால் சிஏஜியின் இந்த அறிக்கையே பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீட்டின் பேரில் மிகையாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பது சிஏஜியின் முன்னாள் அதிகாரி ஆர்.பி.சிங்கின் கருத்து.
ஆர்.பி.சிங்கின் கருத்தை வைத்து நாடாளுமன்றத்தில் சிஏஜி தொடர்பாகவும் அவரது கருத்து தொடர்பாகவும் 193-வது விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் 2ஜி தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழுவில் இடம்பெற்றிருக்கும் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இளங்கோவன் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
ஆர்.பி.சிங். விவகாரத்தை வைத்து தங்கள் மீதான ஊழல் கறையை எப்படியாவது அகற்றிவிடுவது என்ற அக்னி பரீட்சையில் இறங்கியிருக்கிறது!