டிரவுசரைக் கழற்றி தண்டனை: பள்ளி மாணவன் வகுப்பறையில் தீக்குளிப்பு
பிஜப்பூர்: கால்சட்டையை கழற்றி ஆசிரியர் தண்டனை கொடுத்த காரணத்தால் அவமானம் தாங்காமல் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தீ வைத்துக்கொண்டான்.
கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் புதன்கிழமை காலையில் அனைத்து மாணவர்களும் பள்ளி முன்பு வெளியில் வரிசையாக நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன், வகுப்பறைக்குச் சென்று தன் உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். இதனால் பதற்றமடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எரிந்து கொண்டிருந்த மாணவனை மீட்டனர்.
பலத்த காயமடைந்த மாணவனை உடனடியாக சோலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவமானப்படுத்திய ஆசிரியர்
தீ வைத்துக்கொண்டது குறித்து மாணவனிடம் கேட்ட போது, தன்னுடைய டவுசரை கழற்றி ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக கூறினான். இதனால் அவமானம் தாங்காமல் தீவைத்துக் கொண்டதாக மாணவன் தெரிவித்தான்.
மாணவன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதோ, பள்ளி நிர்வாகம் மீதோ பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக இதுவரையில் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.