சுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் 700 இந்தியர்கள் ரகசியக் கணக்கு வைத்திருப்பதாக பிரான்சு அரசு ஒரு பட்டியலை இந்தியாவிடம் கடந்த ஆண்டு வழங்கியது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் சிலர் போலி பெயர்களிலும் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதுபற்றிய விவரங்களையும் சுவிஸ் அரசிடம் இந்தியா கோரியுள்ளது.
இந்நிலையில் கணிசமான தொகையை பதுக்கியோர் மீது முதல் கட்டமாக வழக்கு தொடர வருமான வரித்துறை முடிவு செய்திருக்கிறது. அப்படியெனில் எவ்வளவு தொகைக்கு மேல் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. ரூ5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோருக்கு எதிராக வரி ஏய்ப்பு வழக்கு தொடர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள்.
ரூ.5 கோடிக்கு குறைவாக பணம் போட்டு வைத்து இருப்போருக்கு அபராதம் வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.