தரையைப் பெருக்கிய மாணவிகளை செல்போனில் படம் பிடித்த வக்கிர மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் 3 மாணவிகள் தங்களது வகுப்பறையை பெருக்கியபோது அதை செல்போனில் படம் பிடித்து வக்கிரமாக கமெண்ட் அடித்ததோடு அவர்களை மிரட்டவும் செய்த மாணவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் 2 மாணவர்களைப் போலீஸார் கைது செய்தனர். ஒருவரைத் தேடி வருகின்றனர்.
இப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவி விஜயா. அதே வகுப்பைச் சேர்ந்த பிரியா, கெளசல்யா ஆகியோருடன் சேர்ந்து தனது வகுப்பறையை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார் விஜயா. அப்போது அங்கு வந்த பிளஸ்டூ படிக்கும் சசிக்குமார், சப்பாணி முத்து, அசோக்குமார் ஆகியோர் மாணவிகளை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் வக்கிரமாக பேசியும் உள்ளனர்.
இதைப் பார்த்த விஜயா, மாணவர்களிடம் இந்த செயலைத் தட்டிக் கேட்டார். அதற்கு அவர்கள் இதை வெளியில் சொன்னால் அவ்ளவுதான் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
மாணவர்களின் இந்த இழி செயல் குறித்து தலைமை ஆசிரியை மேரி கிறிஸ்டினாளிடம் மாணவிகள் புகார் கூறியுள்ளனர். அவரோ மாணவர்களைக் கூப்பிட்டுக் கண்டிப்பதற்குப் பதில் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமே, நீங்க ஒழுங்கா இருந்தா அவங்க ஏன் படம் பிடிக்கப் போறாங்க என்று கூறி மாணவிகளை அதிர வைத்துள்ளார்.
இதையடுத்து தங்களது பெற்றோரிடம் மாணவிகள் நடந்ததைக் கூறவே அவர்கள் கொந்தளித்தனர். இந்த இடத்தில்தான் சாதிப் பிரச்சினை குறுக்கிட்டுள்ளது.
மாணவிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், செல்போனில் படம் பிடித்த மாணவர்கள். இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திரட்டிக் கொண்டு கூமாபட்டியில் சாலை மறியலில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தாசில்தார், டிஇஓ, இன்ஸ்பெக்டர், மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் செல்போனில் மாணவிகளைப் படம் பிடித்த மாணவர்கள் மீ்து காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க முடிவானது. இதையடுத்து மாணவர்கள் மீது விஜயா புகார் கொடுத்தார். அதைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி அசோக்குமார், சப்பாணி முத்துவைக் கைது செய்தனர். சசிக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் சாதிக் கலவரமாக மாறி விடும் அபாயம் இருப்பதால் போலீஸார் மிகுந்த உஷாருடன் இந்த விவகாரத்தை அணுகி வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications