தமிழகம், புதுவையில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலையில் மதிமுக சார்பில், மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை முகப்பேரில் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை அசோக்நகரில் விடுதலைச் சிறுத்தைகள் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஆவடியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நாள் ஈகைத் தூணுக்கு பழ.நெடுமாறன், மலர் தூவி மரியாதை செலுத்தினா.
தஞ்சாவூரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கம், மதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் விடுதலை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல கிராமங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடக்க காலத்தில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட புலியூர் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் பொதுமக்களும் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வை நடத்தினர்.
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டார்.
புதுச்சேரியில் நடைபெற்ற மாவீரர் நாள் வணக்க நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன், புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.