அன்னிய முதலீடு: ராஜ்யசபாவில் டிச. 6,7 ல் வாக்கெடுப்பு
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
அன்னிய முதலீட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயின. பின்னர் திமுக கொடுத்த தைரியத்தில் மக்களவையில் இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு தயார் என மத்திய அரசு அறிவித்தது. டிசம்பர் 4,5 ஆகிய நாட்களில் மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் வாக்கெடுப்பில்லா விவாதம் மட்டுமே நடத்தலாம் என்று அரசுத் தரப்பில் கூறிவந்தது. மேலும் மக்களவையில் அரசை ஆதரித்தாலும் மாநிலங்களவையில் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று சமாஜ்வாடி கட்சி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
இந்நிலையில் இன்று காலையும் அமளி நீடித்த போது அவைத் தலைவரான, ஹமீத் அன்சாரி, மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தலாம் என்று அறிவித்தார்.
மக்களவையில் விவாதம் முடிந்த பிறகு டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் மாநிலங்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற இருக்கிறது.