அடிக்கிறாங்க மிஸ்... இந்திய மாணவன் புகார் - பெற்றோரை கைது செய்த நார்வே போலீஸ்!
ஆஸ்லோ: தன்னை தனது பெற்றோர் துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் புகார் கூறினான் இந்திய சிறுவன். இதையடுத்து அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அனுபமா. இவர்கள் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மூத்த மகன் சாய் ஸ்ரீராம். இன்னொரு மகனும் இருக்கிறான். ஸ்ரீராமின் ஒழுக்கம் குறித்துக் கவலை அடைந்த பெற்றோர் இந்தியாவுக்கு அனுப்பி படிக்க வைக்க முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் தன்னை தனது பெற்றோர் அடித்துத் துன்புறுத்துவதாக வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளான் ஸ்ரீராம். தான் டிரவுசரில் சிறுநீர் போனதற்காக தனது பெற்றோர் கடுமையாக கண்டித்து அடித்ததாக கூறினானாம் ஸ்ரீராம். இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் கொடுத்தது. அதன் பேரில் போலீஸார் மாணவனின் பெற்றோரைக் கைது செய்து விட்டனர்.
அனுபமா, சந்திரசேகர் தம்பதி மீது என்ன குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தினர் கூறுகையில், ஏற்கனவே நார்வே நாட்டு சிறார் நலப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீராமை தங்களது பொறுப்பில் கொண்டு சென்றனர். ஒரு மாதம் அவர்களிடம் இருந்தான். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அவனுக்கு ஹைபராக்டிவ் பிரச்சினை இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரிடம் கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் குடும்பத்தோடு சந்திரசேகர் இந்தியா வந்தார். ஆனால், இந்த மாதம் சந்திரசேகர் தனது பணி நிமித்தமாக தனது மனைவியோடு நார்வே திரும்பினார். ஆனால் கோர்ட்டில் வந்து ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்துப் பின்னர் கைது செய்து விட்டனர். இதுவரை இந்தக் கைது குறித்து எங்களுக்கு நார்வே தரப்பிலிருந்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர் என்றனர்.
தற்போது சாய் ஸ்ரீராம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மன நல மையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறான்.
சில மாதங்களுக்கு முன்புதான் அனுருப், சாகரிகா என்ற இந்திய தம்பதி, தங்களது 2 குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்று கூறி குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் அவனது பெற்றோரை நார்வே அதிகாரிகள் கைது செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.