ரஃபேல் குறித்து பொய் புரட்டு! அம்பலப்பட்ட பாகிஸ்தான்! இந்திய விமானப்படையின் ஆவணத்தில் வெளிவந்த உண்மை
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு சொந்தமான ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தம்பட்டம் அடித்தது. இந்தியா இதனை நிராகரித்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தது. இந்தியாவின் அதி நவீன ரஃபேல் விமானத்தை சுட்டதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் கூறியது அப்பட்டமான பொய் என்பது தற்போது வெளியாகியிருக்க கூடிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய விமானப்படை வெளியிட்ட ஆவணம் ஒன்றில், இந்தியாவிடம் இருக்கு 36 ரஃபேல் ஜெட் விமானங்களும் தற்போது சர்வீஸில் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீன் பஹல்காமில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் டிரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தின. ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதில் ரஃபேல் விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.
பாகிஸ்தான் சொல்வது பொய்
இந்திய விமானப்படைக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான டசால்ட் அவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவிடம் தற்போது 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ள நிலையில், மேலும் இதற்கான bridge support கோரி ஒப்பந்த புள்ளி விடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரபேல் விமானங்களும் தற்போது முழுமையாக இருப்பதாக இந்த ஆவணங்கள் கருதுகின்றன.
இதன் மூலம், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பல ரபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.
114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு
இதற்கிடையில், இந்திய விமானப்படையை மேலும் வலு சேர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இந்த கொள்முதல், பல்நோக்கு போர் விமான (MRFA) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
முன்மொழியப்பட்டு இருக்கும் இந்த ஒப்பந்தம் குறித்து, இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையிலும் விவாதிக்கப்பட்டது. எம்ஆர்எஃப்ஏ திட்டத்தின் கீழ், 18 ரபேல் போர் விமானங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் நேரடியாக இந்தியாவுக்கு வழங்க வேண்டும் எனவும். மீதமுள்ள விமானங்கள் இந்தியாவிலேயே சுமார் 50 சதவீத உள்நாட்டு உற்பத்தி பங்களிப்புடன் தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
விமானத்தின் சிறப்புகள்:
ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சம் மணிக்கு 2,223 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 9,500 கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்டது. விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் ஆகும். இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் ஆகும்.















Click it and Unblock the Notifications