ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைதளத்தை தாக்கிய தாலிபான் தீவிரவாதிகள்
காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை தளத்தை தாலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கினர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கார் மாகாணத் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படை தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு நேட்டோ தளத்தின் வாயிலில் தாலிபான்கள் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதன் பிறகு 5 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேட்டோ தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களின் விவரம் தெரியவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவ உடையில் 5 பேர் இறந்து கிடந்ததைப் பார்த்தாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இறந்தவர்கள் ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா என்று தெரியவில்லை என்றார்.
விமான நிலைய வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தீவிரவாதிகள் அதையும் மீறி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னதாக இதே விமான நிலையத்தை இந்த ஆண்டு தீவிரவாதிகள் இரண்டு முறை தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications