சென்னை திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஒருவர் சாவு
சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் திருமண மண்டபத்தில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்ததில் பலியானார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
ஆந்திராவைச் சேர்ந்தவர் சுப்பாராவ். தொழில் அதிபர். அவரது இல்லத் திருமணம் கொருக்குப்பேட்டையில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் ராவ்(53) என்பவர் மண்டபத்தின் 3வது மாடியில் இருந்து தரைதளத்திற்கு வர லிஃப்டில் ஏறியுள்ளார்.
13 பேர் வரை தாங்கக்கூடிய அந்த லிஃப்டில் பிரசாத் ராவ் உள்பட 3 பேர் மட்டுமே ஏறியுள்ளனர். அப்போது லிஃப்ட்டை தாங்கும் கயிறு அறுந்து அது வேகமாக வந்து தரைதளத்தில் மோதியது. இதில் பிரசாத் ராவ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் திருமண மண்டப சூப்பர்வைசர் ஹரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications