மேட்டூர், கோபிநத்தம் அருகே கர்நாடக எல்லையில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு: கருணாநிதி கண்டனம்

எனவே இரு மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம்-ஒழுங்கினைத் பேணிக் காத்திட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையின் தொடர்ச்சியாக இரு மாநில மக்களிடையே தோன்றிய கசப்புணர்ச்சி, பகை உணர்ச்சியாக உருவாகிட, கர்நாடக பா.ஜ.க. ஆட்சியாளர்களும், தமிழக அதிமுக ஆட்சியாளர்களும் எந்த நிலையிலும் எள்ளளவும் இடமளித்து விடக்கூடாது.
அதனால்தான் அண்டை மாநிலங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளைச் சுமூகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாகச் சொல்லி வருகிறேன்.
ஆனால் நேற்று வந்துள்ள செய்தியின்படி மேட்டூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழர்களை, அம்மாநில வனத்துறையினர் விரட்டியடிக்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் தமிழக, கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்கா கோம்பு, பூங்கோம்பு, அப்புக் காம்பட்டி, ஜம்புருட்டு, மாறு கொட்டாய், ஆலம் பாடி உள்ளிட்ட கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், அங்கே பெரும்பாலும் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களையெல்லாம் கர்நாடக அதிகாரிகள் விரட்டியடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சிறு பொறி பெருந்தீயாக மாறுமானால், மைய நோக்கம் சிதறுண்டு திசை திரும்பி விடும். எனவே இரு மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்போடு மேற்கொண்டு சட்டம்-ஒழுங்கினைத் தக்க முறையில் பேணிக் காத்திடவும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னடியர்களுக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை எடுத்து உதவிடவும் வேண்டுமென்று வலியுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications