கரூரில் டெங்கு காயச்சல் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் வாசவி கிளப்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 9,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயின் தீவிரம் கண்டு தமிழக அரசு தடுப்பு நவடிக்கையாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் கரூரில் இதையும் தாண்டி பொது மக்களுக்கு தடுப்பு மருந்தை இலவசமாகவே விநியோகம் செய்து வருகின்றனர் வாசவி கிளப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள வாசவி மஹாலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் நகர் மன்றத் தலைவர் செல்வராஜ் டெங்கு காய்சலுக்கான இலவச ஹோமியோபதி மாத்திரைகளை பொது மக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஒரு நாளில் மட்டும் சுமார் 32,000 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகர்மன்ற உறுப்பினர் கமலா சுப்பிரமணியன், வாசவி கிளப் தலைவர் பி. சித்தேஸ்வரன், செயலாளர் மதன், பொருளாளர் நந்தாஹரீஸ், வாசவி மகிளா மன்றத் தலைவர் மீனாட்சி கருணாகரன், கரூர் ஆரிய வைஸ்ய சங்க செயலாளர் ரங்கநாதன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி, செளரி பார்மா முருகானந்தம், குமுதம் ஏஜெண்ட் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வாசவி கிளப் செயலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications