தோண்டப்பட்ட யாசர் அராபத் உடலில் இருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்
ரமலா: பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக 60 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பாரீஸில் உள்ள பிரான்ஸ் ராணுவ மருத்துவமனையில் தனது 75வது வயதில் இறந்தார். அவரது இறப்புக்கு இது தான் காரணம் என்று பிரான்ஸ் மருத்துவர்களால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர் இஸ்ரேலியர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்றே பல பாலஸ்தீனியர்கள் நம்பினர்.
இந்நிலையில் அவரது மனைவி சுஹாவிடம் இருந்து அராபத்தின் உயிரியல் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் தனது அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அராபத் இறக்கும்போது அவரது உடலில் கொடிய விஷமான பொலோனியம் இருந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அராபத்தின் மனைவி சுஹா கொடுத்த புகாரின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள் அராபத் மரணம் குறித்த விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கினர்.
விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட அராபத்தின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அவரது கல்லறையை உடைத்து உடலைத் தோண்டி எடுக்கும் பணி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் நடந்தது.
அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறிய அவரது எலும்புகளில் இருந்து 60 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை 3 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்து வருகின்றன. இந்த முடிவுகள் வெளிவர இன்னும் 3 அல்லது 4 மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.
மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அராபத்தின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications