பார்லி.யில் நாளை வாக்கெடுப்பு- தப்புமா மன்மோகன்சிங் அரசு?
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பான விவாதத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தெளிவற்ற அறிவிப்பால் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறது மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு!
மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 273. காங்கிரஸ் கட்சிக்கு 206 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மத்திய அரசை உறுதியாக ஆதரிக்கும் திமுகவுக்கு 18, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.பிக்கள் உள்ளனர். இந்த இரண்டு கட்சிகளைத் தவிர ராஷ்டிரிய லோக் தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் காங்கிரஸ் அரசை ஆதரிக்கின்றன. ஆனால் இவற்றின் ஆதரவுடன் அரசு தப்ப முடியாது.
மத்திய அரசு தப்ப வேண்டுமெனில் 22 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடியின் ஆதரவும் 21 எம்.பிக்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் ஆதரவு அவசியம். இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே மத்திய அரசு தப்பும். ஆனால் தமது கட்சியின் நிலைப்பாட்டை வாக்கெடுப்பின் போது தெரிவிப்பதாக பகுஜன் சமாஜ் அறிவித்திருப்பதால் குழப்பம் நீடித்தே வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 206 எம்.பிக்களும் அரசுக்கு வாக்களிப்பார்களா? என்ற கேள்வியும் உருஆகி உள்ளது. தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காததால் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் இன்றைய விவாதம் மற்றும் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு தர மறுத்தால் மன்மோகன்சிங் அரசு கவிழத்தான் செய்யும் நிலை உள்ளது! ஆனால் எப்படியும் தேறிவிடுவோம் என்பதே மத்திய அரசின் நம்பிக்கையாக இருக்கிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், வாக்கெடுப்பில் நிச்சயம் மத்திய அரசு வெற்றி பெறும். இந்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் பின்னால் பதுங்கியிருக்கும் அரசியலை கட்சிகள் புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications