தேர்தலுக்காக காவிரி விவகாரத்தை அரசியலாக்கும் பாஜக அரசு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் குற்றச்சாட்டு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிரிடப்பட்டு உள்ள 14 லட்சம் ஏக்கர் சம்பா பயிரை காப்பாற்ற, இடர்பாடு பங்கீட்டு கொள்கையின்படி (distress period formula) உடனடியாக தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிடுகையில்,
தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு உள்ள 14 லட்சம் சம்பா பயிர் தண்ணீர் இல்லாமல் கருகிக்கொண்டு இருக்கிறது. இதைக் காப்பாற்ற 30 டி.எம்.சி. தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இரு மாநிலங்களுக்கும் பொதுவான இடமான பில்லி குண்டுவில் இதுவரை 307 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அதில் இருந்து கர்நாடகம் 67 டி.எம்.சி. மட்டுமே தமிழ் நாட்டுக்கு திறந்து விட்டுள்ளது. மீதி தண்ணீர் முழுவதையும் அந்த மாநிலமே பயன்படுத்திக் கொண்டுவிட்டது.
இதுவரை தமிழ்நாட்டுக்கு 97.30 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 60 டி.எம்.சி. மட்டுமே திறந்து விட்டுள்ளது. மீதி உள்ள 37.30 டி.எம்.சி. தண்ணீரில் 30 டி.எம்.சி. தான் திறந்துவிடும்படி கேட்கிறோம். எனவே, 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பிரதமர் தலைமையில் நடந்த கூட்டம், காவிரி நடுவர் மன்றக் கூட்டம், காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையக் கூட்டம் ஆகிய கூட்டங்களில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டும் கூட, கர்நாடக அரசு கீழ் படியவில்லை. அதேபோல், உச்ச நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வில்லை.
பருவ நிலை கூட தெரியாத கண்காணிப்பு குழுத் தலைவர்:
காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், சம்பா பயிரை காப்பாற்ற உடனடியாக தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுங்கள். இல்லையென்றால், பயிர்கள் கருகி விடும் என்று முறையிட்டோம். ஆனால், நாட்டின் பருவ நிலை பற்றி எனக்கு தெரியாது என்று கண்காணிப்பு குழு தலைவர் சொல்லி விட்டார். பருவ நிலையே தெரியாத ஒருவர் காவிரி கண்காணிப்பு குழு தலைவராக இருப்பது எங்களுக்கு வியப்பாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை காரணமாக வைத்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. ஆகவே, 14 லட்சம் சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தமிழ் நாட்டுக்கு உரிய 30 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காவிரி நீர் விவகாரத்தை கர்நாடக அரசு அரசியலாக்கி வருகிறது. இதே காரணத்துக்காகத் தான் கர்நாடகத்தை தண்ணீர் திறந்துவிடுமாறு மத்திய அரசும் நெருக்கடி தர மறுக்கிறது என்றார்.
கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி:
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 1991 மற்றும் 1995ம் ஆண்டுகளில் இதே போன்று நிலைமை ஏற்பட்டபோது கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதேபோல், இப்போதும் திறந்து விடலாமே? உடனடியாக 25 அல்லது 20 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டால், கர்நாடகத்தின் நிலை என்ன? என்று கேட்டனர்.
இதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் பதிலளிக்கையில், அப்படி உத்தரவிட்டால் அதையும் கடுமையாக எதிர்ப்போம். தற்போது கர்நாடகத்துக்கே பாசனத்துக்கும், குடி தண்ணீருக்கும் போதிய அளவு தண்ணீர் அணைகளில் இல்லை. ஆகவே, தமிழ் நாட்டுக்கு கொஞ்சம் கூட தண்ணீர் திறந்துவிட முடியாது. குறைந்தபட்சம் நீரைத் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டால் அது மோசமான உத்தரவாகக் கருதப்படும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications