லட்டு கிடைக்காமல் போகமாட்டோம்: திருப்பதி கோவிலில் பக்தர்கள் ஆர்பாட்டம்
ஹைதராபாத்: திருப்பதி எழுமலையான் கோவிலில் முந்திரி, உலர் திராட்சை தீர்ந்து போனதால் லட்டு தயாரிக்கும் பணி தடைபட்டது. இதை கண்டித்து பக்தர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 2 லட்டு வழங்கப்படும். கூடுதல் லட்டு கேட்பவர்களுக்கு தலா ரூ.25 கட்டணம் வாங்கிக் கொண்டு 4 லட்டுகள் வழங்கப்படும்.
இந்நிலையில் நேற்று கோவிலில் லட்டுக்கு தட்டுப்பாடாகிவிட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் லட்டு நிறுத்தப்பட்டு கவுண்டரும் மூடப்பட்டது. ஏழுமலையான் கோவிலுக்கு வந்து லட்டு கிடைக்காமல் திரும்பிப் போவதா என்று பக்தர்கள் கடுப்பாகி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தேவஸ்தான அதிகாரிகள் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை சமாதானம் செய்தனர். லட்டு தயாரிக்கத் தேவைப்படும் முந்திரி மற்றும் உலர் திராட்சை தீர்ந்துவிட்டதால் தான் லட்டு தயாரிப்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது என்றும், இதை பக்தர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
முந்திரி, உலர் திராட்சை ஸ்டாக் தீர்ந்ததற்கு கோவில் அதிகாரியின் அலட்சியம் தான் காரணம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications