ராஜ்யசபா தேர்தல்: எம்பி பதவியைப் பிடிக்க திமுக, தேமுதிக, சிபிஐ
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வியூகங்கள் வகுத்து வருகின்றன.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அதிமுகவின் மைத்ரேயன், இளவரசன், திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் ஆகியோரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகின்றது.
இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் மே மாதம் தமிழக சட்டசபையில் நடக்கிறது. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை கைப்பற்றியே ஆக வேண்டும் என திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வரிந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன.
தேமுதிகவில் உள்ள 29 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் அதிமுக பக்கம் தங்களது பாதை திரும்பிவிட்டனர். அதனால் தேமுதிகவிடம் தற்போது 25 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். திமுவிடம் 23 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் 9 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை எம்.பியாக்க அக்கட்சி முனைப்பாக உள்ளது. ஆனால் தேமுதிகவிடம் பெரும்பான்மை இல்லை.
அதே போல திமுவில் கனிமொழிக்கு மீண்டும் எம்.பி. பதவியை பெற்றே ஆக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றதாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தா.பாண்டியன் இந்த பதவியை எதிர்பார்த்து மிகவும் ஆவலாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேசியச் செயலாளர் டி.ராஜாவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என டெல்லி தலைமை விரும்புகின்றதாம்.
இந்த நிலையில் திமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் தயவை எதிர்பார்த்து காத்துள்ளன. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக தயவை எதிர்பார்த்துள்ளது.
அதே போல காங்கிரசும் எம்பி பதவியைப் பிடிக்க திமுக ஆதரவைக் கேட்கலாம் என்று ஆசைப்படுகிறது. ஆனால், காங்கிரசுக்கு எம்பி பதவியை திமுக விட்டுத் தர வாய்ப்பில்லை. இதனால் இறுதியில் திமுக, தேமுதிகவுக்கு ஆதரவு தந்து அவர்களுக்கு எம்பி பதவிகளைக் கிடைக்க வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டாக கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயலலாம்.












Click it and Unblock the Notifications