நெல்லை பள்ளியில் மாணவிகளின் ஆடையை அவிழ்த்த விடுதி வார்டன் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்த விடுதிக் காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையை அடுத்த பாளை ஐகிரவுண்ட் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 80 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் விடுதி பாத்ரூமில் கழிவுத்துணிகள் கழிவறையில் அடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த பெண் வார்டன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவிகள் 20 பேரை அழைத்து, பாத்ரூமில் இவற்றை போட்டது யார்? என விசாரித்ததோடு அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாது மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்தும் சோதனை செய்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் விடுதியிலிருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.
பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் திங்கட்கிழமையன்று பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளை அவமானப்படுத்திய விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதி வார்டன் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதால் தங்களின் பிள்ளைகள் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், இதை பெரிதுபடுத்தினால் டிசி கொடுத்துவிடுவதாக தலைமையாசிரியர் மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் கூறினார். வார்டன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சம்பந்தப்பட்ட வார்டனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இனி இதுபோல் நடைபெறாது என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications