திமுகவுடன் தேமுதிக கூட்டணியா?:... இருக்கலாம்..: விஜயகாந்த் பேட்டி

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேட்டூர் எம்.எல்.ஏ. பார்த்திபன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்த பினன்ர் சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆளும் கட்சி அல்லது முதல்வர் ஜெயலலிதாவையோ விமர்சனம் செய்யக்கூடாதா? இவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துகிறார்களா? இதற்கெல்லாம் நாங்கள் அச்சப்படமாட்டோம். ஆயிரம் வழக்குகளை போட்டாலும் சந்திப்போம். அதிகபட்சம் ஒரு மாதம் சிறையில் தள்ளுவார்களா? அல்லது ஒரு ஆண்டு சிறையில் அடைப்பார்களா?. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.
இப்போது எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மீடியாக்களும் இதனை வெளியிட்டு வருகின்றன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காய்ச்சல் என்கிறார்கள். டெங்கு காய்ச்சல் என்று சொல்லக்கூடாது என்றும் மர்ம காய்ச்சல் என்று சொல்லுமாறும் கூறுகின்றனர். மர்ம காய்ச்சல் என்ன காய்ச்சல் என்று தெரியணுமா? வேண்டாமா?. இவ்வளவு டாக்டர்கள் இருக்கிறார்கள். மர்ம காய்ச்சலுக்கு பெயர் என்ன? அதனை அரசு விளக்க வேண்டும்.
மதுரை மேலூரில் டெங்கு காய்ச்சலினால் 50 பேர் இறந்துள்ளனர் என்று நான் மீடியாவிலும், பத்திரிகை மூலமும் அறிந்தேன். இதனை பற்றி பேசக்கூடாதா?. அவதூறு வழக்குகளை என் மீது, கலைஞர் மீது, ஸ்டாலின் மீது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது போடுகின்றனர். இந்த அம்மாவை பற்றி எதுவுமே சொல்லக் கூடாதா?. இவர்கள் ஒழுங்கான ஆட்சி நடத்துகிறார்களா?.
எங்கள் கட்சி மீது அவதூறு வழக்கு போடுகிறார்கள் என்றால் எங்கள் கட்சி வளர்ந்து இருக்கிறது என்றுதானே அர்த்தம். எங்கள் கட்சியை பார்த்து அ.தி.மு.க. அரசு பயப்படுகிறது. இதுதான் உண்மை.
மத்திய அரசிடம் மின்சாரம் வாங்கித் தருகிறேன் என்றா இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்?. இதனை சொல்லியா ஓட்டு கேட்டார்கள். இப்போது மத்திய அரசை எந்த அடிப்படையில் விமர்சிக்கிறார்கள்?.
வைர விழாவுக்கு ஏன் சென்றீர்கள்? என்று ஒரு நிருபர் என்னிடம் கேட்டார். வைர விழா ஜெயலலிதாவுக்கு நடைபெறவில்லை. சட்டசபைக்குதான் வைர விழா. அதனால்தான் சென்றேன். மக்களால் நான் தேர்ந்து எடுக்கப்பட்டேன். எனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்தது மக்கள். மக்களுக்காகத்தான் நான் சட்டசபைக்கு சென்றேன்.
காவிரி பிரச்சனையில் அனுசரணை போக்கு அவசியம். எல்லாரிடமும் முறைப்பது சரியல்ல. நாம்தான் உலகத்தில் பெரிய ஆள் என்றும் நினைத்துவிடக்கூடாது. நதிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நதிகள் வந்தால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
கர்நாடக எல்லையில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு இருந்தால் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கர்நாடகம், தமிழ்நாடு இடையே ஒற்றுமை அவசியம்.
மதுரை என்கவுண்டர் பற்றி டி.வி.யில்தான் பார்த்தேன். தப்பித்து ஓடினால் முதுகில்தானே சுட வேண்டும். ஏன் நெஞ்சில் சுட்டனர்? என்ற கேள்வி சரியானது தான். இதற்கு காவல்துறையினர் உரிய பதிலை அளிக்க வேண்டும்.என்றார் விஜயகாந்த்.
அப்போது ஒரு செய்தியாளர், நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த், இருக்கலாம். அன்று பார்த்துக் கொள்ளலாம். இப்போது நாடு கெட்டு குட்டிச்சுவராகி விட்டது. தேர்தல் எப்போதோ வரும். இன்றைக்கே எல்லாவற்றையும் கூறிவிட முடியாது என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க இருக்கிறது என்பதையே விஜயகாந்த் சூசகமாக சுட்டிக்காட்டியிருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications