சிறையில் ஆயுர்வேத மருந்து மூலிகைகளை வளர்க்கும் ஆந்திர கைதிகள்!
ஹைதராபாத்: ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இமாலயா டிரக் நிறுவனம், தனது மருந்துகளுக்குத் தேவையான மூ்லிகை வளர்க்கும் பணியில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்தி வருகிறது. இதற்காக ஆந்திர மாநில சிறைத்துறையுடன் ஒப்பந்தம் போட்டு கைதிகளின் சேவையை அது பயன்படுத்தி வருகிறது.
சிறைக் கைதிகளுக்கான சீர்திருத்த முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆனந்தப்பூர் சிறைக் கண்காணிப்பாளர் லட்சுமிபதி கூறுகையில், ஆனந்தப்பூர் திறந்தவெளி சிறையில், கடந்த ஆகஸ்ட் முதல் மருத்துவ தாவரங்களை வளர்க்க ஆரம்பித்துள்ளோம். இமாலயா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
முதலில் 2 ஏக்கர் நிலத்தில் மட்டும்தான் பயிரிட்டோம். ஆனால் தற்போது மேலும் நான்கு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6 ஏக்கர் நிலத்திலும் தற்போது பயிர்கள் அறுவடைக்குத் தயாராகி விட்டன. இந்த நிலம் முழுவதும் சிறை வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது என்றார் அவர்.
நிலம், தண்ணீர் வசதி, மின்சாரம் போன்றவற்றை சிறை நிர்வாகம் வழங்கும். விதைகள், வளர்க்கும்முறை போன்ற தொழில்நுட்ப உதவிகளை இமாலாயா நிறுவனம் அளிக்கும்.
முதலில் கைதிகள் ஆல்பால்பா தாவரத்தைப் பயிரிட்டு வளர்த்தனர். இதில் முதல் அறுவடை முடிந்து விட்டது. தற்போது 2வது அறுவடைக்குப் பயிர்கள் தயாராகி வருகின்றனவாம்.
இந்த பயிர் வளர்க்கும் பணியில் 20 முதல் 25 கைதிகள் வரை ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தப் பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு சம்பளமும் தரப்படுகிறது. ஒரு நாள் கூலி ரூ. 50 தரப்படுகிறதாம்.
அடுத்து துளசி, அலோ வேரா, ஜிம்னிமா உள்ளிட்ட பயிர்களையும் சிறை வளாகத்தில் பயிரிடும் திட்டத்தில் உள்ளதாம் சிறை நிர்வாகம்.












Click it and Unblock the Notifications