“தோல்விபயம் அதான் இந்தப்பக்கம் வரலை”: ராகுலை கிண்டல் செய்த மோடி

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 13, 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் நரேந்திர மோடி 3டி ஹாலோ கிராபிக் தொழில் நுட்ப முறை மூலம் 52 இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் பிரச்சாரத்தில் தனது சாதனைகளை பட்டியலிடும் மோடி எதிர்க்கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.
விலைமதிப்பற்ற அந்த தலைவருக்கு ( ராகுல் காந்தி) குஜராத்தில் தனது கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்யும் துணிச்சல் வரவில்லை. குஜராத் மாநில மக்களை எந்த வகையிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதை அவர் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். என்னதான் பிரசாரம் செய்தாலும் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் என்பதால் அதற்கு பொறுப்பேற்க பயந்துதான் அவர் இங்கு வரவில்லை.
உத்தரபிர தேச மாநிலத்தில் அவர் கடந்த ஒரு வருடமாக முகாமிட்டுள்ளார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளை சரிவர அவரால் பூர்த்தி செய்ய இயலாத காரணத்தால் அந்தக் கட்சியை அங்குள்ள மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் மோடி கூறினார்.
கடந்த 10 வருடங்களில் எனது ஆட்சியில் அதிக கடன் சுமை ஏற்படுத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இது அப்பட்டமான பொய். நிலையான எங்கள் ஆட்சியின் மூலம் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு குஜராத் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் நமது நாடு 40 லட்சம் கோடி கடன் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் அந்த மாநிலம் 2.25 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. இதிலிருந்து காங்கிரசின் லட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் நரேந்திரமோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications