பிரணாப் முகர்ஜி வெற்றியை எதிர்த்த பி.ஏ. சங்மா மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதை எதிர்த்த முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார். பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். பிரணாப் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர் புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்தார் என்று சங்மா குற்றம்சாட்டினார். இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ஏற்கனவே ராஜினாமா செய்திருப்பதாக ஒரு கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அக்கடிதத்தில் இருக்கும் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து போலியானது என்று சங்மா தரப்பு வாதிட்டது. இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சங்மா பிரணாப் முகர்ஜியின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்தது. அதில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி பி. சதாசிவம் மற்றும் நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனால் நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
5 நீதிபதிகளில் 3 பேர் மனுவை தள்ளுபடி செய்தனர். இது குறித்த விளக்கத்தை நீதிபதி செலமேஸ்வர் அடுத்த வாரம் தெரிவிக்கவிருக்கிறார். அதன் பிறகு சங்மா விரும்பினால் தீர்ப்பை மறுபரிசீலிக்கக் கோரி மனு தாக்கல் செய்யலாம்.












Click it and Unblock the Notifications