இலங்கையில் 40 மீனவர்கள் கைது- பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அனுப்பியுள்ள கடித விவரம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியான புல்மோட்டை என்ற இடத்தில் கைது செய்தது இலங்கை கடற்படை.
இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை படகுகள் மற்றும் மீனவர்களை காவல் படையினர் எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமும், கவலையும் அதிகரிக்கிறது.
மீனவ மக்களிடையே நிம்மதியில்லாத நிலை உருவாகிறது. இந்தப் பிரச்னையில் எந்தவித வழக்குகளும் இல்லாமல் 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அதிகாரிகளை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.