நான் கர்நாடகத்துக்கு கருணாநிதி: நம்பிக்கையோடு கனவு காணும் எதியூரப்பா

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அவர் தமது பலத்தை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஹவேரியில் பிரம்மாண்ட மாநாடு மூலம் வெளிப்படுத்தைருக்கிறார்.
இந்நிலையில் டெக்கான் குரோனிக்கல் நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் செல்வாக்கு செலுத்துகிற காலம். கர்நாடகத்தில் அப்படியான ஒரு மாநிலக் கட்சி தலைவர் இதுவரை இல்லை. இப்போது அதற்கான காலம் வந்திருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், சந்தோஷ் ஆகியோர் என்னை சந்தித்தனர். அவர்களிடம் என்னை பாஜகவின் மாநில தலைவராக்குங்கள் என்று கேட்டேன். நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தேன். நான் மீண்டும் முதல்வராக விரும்பவில்லை என்றும் கூறியதுடன் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற கவலையைத் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அதன் பின்னர் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் என்னிடம் திரும்பி வந்து பேசவில்லை. என்னுடைய தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட அவர்கள் பதில் தரவில்லை. கடைசிவரை அருண்ஜேட்லிதான் எனது நலம் விரும்பியாகவே இருந்தார். கடைசியாக "அவர்களால்" கட்சியிலிருந்து வெளியே தள்ளப்படும் நிலை உருவானது. ("அவர்கள்" யார் என்பதை குறிப்பிட மறுத்துவிட்டார்)
குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி பிரதமராகிறாரோ இல்லையோ.. நான் மீண்டும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன். அவர்கள் என்னிடம் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் நிச்சயமாக பாஜகவுக்கு நான் போகமாட்டேன்.
கர்நாடக மாநிலத்தில் நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், ஹெக்டே, பங்காரப்பா போன்றவர்கள் மாநிலக் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முழு மனதோடு அதைச் செய்யவில்லை. அதனால் அவர்கள் தோல்வி அடைய நேரிட்டது.
அதே நேரத்தில் முலாயம்சிங் மற்றும் கருணாநிதியை பாருங்கள்... இப்போது மாநிலக் கட்சிகளின் காலம். நான் முழு அளவில் தீவிரமாக செயல்படப் போகிறோம். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என பார்க்கத்தான் போகிறீர்கள்...இதன் விளைவாக கர்நாடக மாநிலத்தின் ஒரு கருணாநிதியாக, முலாயம்சிங்காக நான் உருவாவேன்.
கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளிலும் -224 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரஸ் கட்சி அளவுக்காவது நாங்கள் தொகுதிகளைப் பெறுவோம். நிச்சயமாக நான் மாநிலத்தின் முதல்வராக வருவேன். அதற்கு காங்கிரஸின் ஆதரவு எனக்குத் தேவை இல்லை என்று கூறியிருக்கிறார் எதியூரப்பா.
பெல்காமில் காலை விருந்து
கர்நாடகத்தின் கருணாநிதியாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் எதியூரப்பா அதை நிரூபிக்கும் வகையில் இன்று காலை சட்டசபை நடக்கும் பெல்காமில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இன்று காலை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எதியூரப்பா அளித்த விருந்தில், 40 பாஜக எம்.எல்.ஏக்கள், 10 எம்.பிக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் தமது பலம் என்ன என்பதை எதியூரப்பா வெளிப்படுத்த நினைக்கிறார்.
இந்த பலம் இருந்தா அப்ப எதியூரப்பா ஒரு கருணாநிதியாகிவிடுவார்!












Click it and Unblock the Notifications