சென்னை கோர்ட்டிலும் விஜயகாந்த் மீது இன்னொரு அவதூறு வழக்கு
சென்னை: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக அரசுத் தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் ஜெகன் முதல்வர் ஜெயலலிதா சார்பில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில்,
கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது, சசிகலாவுடன் சேர்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடித்ததால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.
ஊழல் தடுப்பு சட்டம் கடுமையாக இருப்பதால் ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது உறுதி என்று அதிமுகவினர் பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சானது அடிப்படை ஆதாரமற்றது. அவதூறானது. உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்.
தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக அவர் பேட்டி அளித்து உள்ளார். இவ்வாறு பேட்டி அளித்த விஜயகாந்த்தை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெகன்.
ஏற்கனவே முதல்வர் குறித்துப் பேசியது தொடர்பாக பல்வேறு ஊர் கோர்ட்டுகளில் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சென்னை கோர்ட்டில் அவர் மீது மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications