டாஸ்மாக்கில் சரக்கையும், அண்ணாச்சி கடையில் பாதாம் பாலையும் 'மட்டும்' திருடிய திருடர்கள்!
பழனி: பழனியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை விட்டுவிட்டு இரண்டு மது பாட்டில்களை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி உடுமலை சாலையில் சண்முகா நதி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக சண்முகம் என்பவரும், விற்பனையாளராக வீரக்குமாரும் உள்ளனர். நேற்று இரவு விற்பனை முடிந்த உடன் வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டுச் சென்றார்.
இந்நிலையில் நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த இரண்டு ஃபுல் பாட்டில் மதுவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இன்று காலையில் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த சரக்கில் இரண்டு பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.640. பாட்டில்களை மட்டுமே. அதே சமயம் கல்லாவில் இருந்த பணம் ரூ.60 ஆயிரம் அப்படியே இருந்தது. சரக்கின் மீது கண் வைத்த திருடர்கள் பணத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதேபோல், பழனி இந்திரா நகரில் பாலு என்பவரின் மளிகைக் கடையில் புகுந்த மர்ம நபர்கள், கடையின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த 2 பாதாம் பால் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அவர்கள் கண்ணைத்திறந்து கூட பார்க்கவில்லை என்று தெரிகிறது.
டாஸ்மாக் கடையில் சரக்கை எடுத்துக்கொண்டு, மிக்ஸிங்கிற்கு பாதாம் பால் எடுத்த திருடர்கள் சைட் டிஸ்சிற்கு எந்த கடையிலும் கை வைக்கவில்லை என்று தெரிகிறது. ‘பாட்டில்கள்' காணமல் போன சம்பவம் குறித்து பழனி டவுன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.