குழந்தைக்கு சூடு வைத்த வழக்கு: சிறை தண்டனையை எதிர்த்து நார்வே ஆந்திர தம்பதி அப்பீல்
ஆஸ்லோ: 7 வயது மகனை அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதற்காக நார்வே நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆந்திர தம்பதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வசித்து வருபவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர். அவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.
பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்துவிட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சிறுவன், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசாரும் சந்திரசேகர் தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகளை மிரட்டி மோசமாக நடத்துதல், வன்முறை, பிற தவறான செயல்கள் புரிதல் போன்ற குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு ஆஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சந்திரசேகர் தம்பதியர் தங்கள் மகனை அடித்து துன்புறுத்தியதுடன், சூடும் வைத்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சந்திரசேகருக்கு 18 மாத சிறை தண்டனையும், அனுபமாவுக்கு 15 மாத சிறை தண்டனையும் விதித்து கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரசேகர் தம்பதி அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சந்திரசேகர் தம்பதியை மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரையில் சிறையில் அடைக்கக் கூடாது என்று அவர்களுடைய வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் இந்த தீர்ப்பு வரும் வரை அவர்களை வெளியே விடக்கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications