எதியூரப்பாவின் புதிய கட்சி இன்று உதயம்- பாஜகவை கதிகலங்க வைக்கும் அமைச்சர்கள்!

எதியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமைச்சர் புட்டசாமி மற்றும் லோக்சபா எம்.பி. பசவராஜ் ஆகியோர் பாஜகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். புட்டசாமியும் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த களை எடுப்பு படலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'பந்தை' எதியூரப்பா ஆதரவாளர்கள் கையிலெடுத்திருக்கின்றனர்.
மாநில உள்கட்டமைப்புத் துறை அமைச்சரான சுனில் வல்யபுரே, தமது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அனுப்பியிருக்கிறார். இன்று ஹவேரியில் நடைபெறும் எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சியின் அறிமுக மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதேபோல் வேளாண்துறை அமைச்சர் உமேஷ் கட்டாவும் புட்டசாமி மற்றும் பசவராஜ் மீதான் ஒழுங்கு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டரிடம் திங்கள்கிழமையன்று தமது எதிர்ப்பை நேரடியாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
தமது ஆதரவாளர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் எதியூரப்பா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை அமைத்ததே நாங்கள்தான். அந்த ஆட்சி கவிழக் கூடாது என்றே காத்திருக்கிறோம். இப்பொழுதும் எங்களது கூட்டணியால்தான் பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இப்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அவர்கள் தானாகவே பாஜகவிலிருந்து விலக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
இதனால் கடுப்பாகிக் கிடக்கும் பாஜக மேலிடமோ களை எடுத்தால் வயலே இருக்காதோ என்று கதிகலங்கிப் போய்கிடக்கிறது!












Click it and Unblock the Notifications