12 மணியான்னா என்ன ஓடிப்போயிடுறீங்க? அன்சாரியை விளாசிய மாயா
வேலைவாய்ப்பில் தலித் மக்களுக்கு முன்னுரிமை கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தார்.
தொடர்ந்து வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து 3 நாட்களுக்குள் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசு அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேற்று முன்தினம் மாயாவதி தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக தினமும் கூச்சல், குழப்பமுமாக இருப்பதால் சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி கடந்த 2 நாட்களாக மதிய வேளையில் அவைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று காலை அவைக்கு வந்த அவரை மாயாவதி விலாசித் தள்ளிவிட்டார்.
அன்சாரியைத் தாக்கி மாயாவதி கூறுகையில்,
நான் எதையும் கவனிக்கத் தயாராக இல்லை. கடந்த சில நாட்களாக நண்பகல் 12 மணிக்கு மேல் அவையை நடத்தவிடுவதில்லை. அவையை ஒழுங்காக நடத்துவது உங்கள் கடமை. நண்பகல் 12 மணிக்கு மேல் உங்களை இங்கே பார்க்கவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு அவை இது. அவை ஒழுங்காக நடக்க நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உச்ச கட்டத்தில் கத்திய மாயாவதியை பாவம் போல் பார்த்துக் கொண்டிருந்தார் அன்சாரி.
அரசு வேலைவாயப்பில் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கும் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் முழுவதும் ராஜ்யசபாவில் அமளியாக உள்ளதால் அவை முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த விவாகரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.