மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைகிறது: பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,195 கனஅடியாக குறைந்துள்ளது. பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகிவரும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீரை திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. இந்த தண்ணீர் தமிழக எல்லையை தொடும் வரை காத்திருந்து விட்டு உடனடியாக டிசம்பர் 9ம் தேதி தண்ணீரை நிறுத்திவிட்டது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்கிழமை காலையில் 17 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. தண்ணீர் நிறுத்தப்பட்டதை அடுத்து ஆனால் இன்று காலை வெறும் 7 ஆயிரத்து 195 கன அடி நீர் தான் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தொடர்ந்து நீர் திறப்பு அதிகமாக இருக்கிறது. நீர்வரத்தை விட தண்ணீர் அதிகளவில் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 48.20 அடியாக இருந்தது. டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீரின் அளவு அதிகரித்ததை அடுத்து பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று நம்பியிருந்த விவசாயிகள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர். சம்பா பயிர்களை காக்க முடியுமா? என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.












Click it and Unblock the Notifications