வால்மார்ட் லஞ்ச விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
டெல்லி: வால்மார்ட் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைய 125 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டு அனுமதிக்கு, இந்தியாவில், ஆதரவு திரட்டுவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, "வால்மார்ட்' நிறுவனம், 125 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அமெரிக்க, "செனட்' சபையில், அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம், இது, தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் எல்லாம், இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது.
இந்த பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவோ அல்லது நீதிமன்ற விசாரணையோ நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் ஆகியவைகள் வலியுறுத்தின. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள், விரிவான விசாரணை வேண்டும் என்று கோரின.
இதனால் பாராளுமன்ற இருசபைகளும் இரண்டு நாட்கள் முடங்கிப்போனது. நேற்று 3-வது நாளும் இந்த பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவுசெய்திருந்தன. புதன்கிழமை காலையில் நாடாளுமன்ற விவாதம் தொடங்கியவுடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, வால்மார்ட் விவகாரம் குறித்து உடனடியாக ஒரு நீதிமன்ற விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை அறிக்கை 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்தது. வால்மார்ட் நிறுவனமானது ரூ.125 கோடி செலவழித்ததாக கூறப்படுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் அறிவித்தார். இந்த விசாரணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications