துரை தயாநிதி நீதிமன்றத்தில் ஆஜர்… தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது

கிரனைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள துரை தயாநிதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 10ம் தேதி முன் ஜாமின் வழங்கியது. அப்போது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், தினமும் கீழவளவு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான துரை தயாநிதி, உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமின் நகலை காண்பித்து, ஜாமின் பெற்றார்.
மேலும், தனது பாஸ்போர்ட்டையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, நாளை முதல் கீழவளவு காவல் நிலையத்தில் துரை தயாநிதி கையெழுத்திட உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டிய வழக்கில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனமும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இயக்குனர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் மீதும் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து துரைதயாநிதி, நாகராஜ் உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகினர். இந்த நிலையில் தலைமறைவான துரைதயாநிதி மீது மேலூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த பிடிவாரண்டை ரத்து செய்யுவும், முன்ஜாமீன் வழங்கவும் துரைதயாநிதி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கிரானைட் அதிபர்கள் செல்வராஜ், நாகராஜ் உள்ளிட்ட சிலரும் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு துரைதயாநிதி, நாகராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராகி பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு தினமும் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications