ராமதாஸ் முகத்தை பார்க்க விரும்புகிறேன், அதனால் அளந்து பேசுகிறேன்-திருமாவளவன்

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர் கூறுகையில்,
தர்மபுரியில் நடைபெற்ற சாதிவெறி கலவரத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தலித் மக்களுக்கு எதராக சாதி வெறியை தூண்டும் வகையில் சிலர் தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றச்செயலாகும்.
சாதி வெறியை தூண்டும்படி செயல்படும் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் முறையாக செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்த அரசியல் சட்டதிருத்த மசோதாவை வரவேற்றுள்ள அனைத்து கட்சியினரையும் விடுதலை சிறுத்தைகள் பாராட்டுகிறது.
கூடங்குளம் அணுமின் உலையை திறக்கக்கூடாது என்பதில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அந்த முயற்சியை கைவிட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளது. தற்போது நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை ஒரு அமைப்பும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேசி உள்ளதாக நிருபர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன். அவர் தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன் என்று மேடை தோறும் முழங்கிய டாக்டர் ராமதாசை நான் எண்ணிப்பார்க்கிறேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
டாக்டர் ராமதாசுடன் நான் இணக்கத்தை விரும்புகிறேன். மறுபடியும் அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். மறுபடியும் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகவே நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். நேருக்கு நேர் சந்திப்பதற்கு நீங்கள் (நிருபர்கள்) ஏற்பாடு செய்யுங்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications