குஜராத்தில் பாஜக ஜெயித்தால் ஓ.கே, ஆனால் மோடி ஜெயித்தால்.. கதி கலங்கும் கத்காரி கோஷ்டி!

Subscribe to Oneindia Tamil

Gadkari
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்றால் எப்படியும் 'தேசிய அரசியலுக்கு' வந்துவிடுவார் என்பதால் கதிகலங்கிக் கிடக்கின்றனர் கத்காரி போன்ற தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர்கள் பலரும் இருக்க, இந்திரா காந்தி தமது வியூகங்களால் விறுவிறுவென அசைக்க முடியாத விஸ்வரூபமெடுத்த கதை இப்போது பாரதிய ஜனதா கட்சியில் நிகழக் காத்திருக்கிறது. இந்த வித்தையை செய்யப் போகிறவர் சாட்சாத் நரேந்திர மோடிதான்!

குஜராத் மாநிலத்தில் கேசுபாய் பட்டேலின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு மாநிலத் தலைவராக உருவெடுத்தார் நரேந்திர மோடி! 2வது முறையாக குஜராத் மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இவர்தான் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று பேசப்பட்டது. அதே நேரத்தில் இன்னமும் பிரதமர் பதவிக்கான கனவில் இருக்கும் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி போன்ற 'அரைடஜன்' பிரதமர் வேட்பாளர்கள் பாஜகவில் இருக்கின்றனர் என்று அக்கட்சித் தலைவர் நிதின் கத்காரி கடுப்படித்திருந்தார். இதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது என்று கலகக் குரல் எழுப்பியிருந்தது.

ஆனால் அர்விந்த் கெஜ்ரிவால் வடிவத்தில் வந்த விஸ்வரூப புயல் கத்காரி எனும் கேப்டனை கவிழ்த்துப் போட்டுவிட கோலங்களும் காட்சிகளும் மாறிப் போய்விட்டன. கத்காரியை கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியாக வேண்டும் என்று பகிரங்கக் குரல்கள் வெடிக்க ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி கட்டப் பஞ்சாயத்து நடத்த வேண்டிய நிலைமை உருவானது.

இந்நிலையில்தான் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தலும் அறிவிப்பு வந்தது. இங்குதான் அந்த மோடி அதிசயம் அரங்கேறியது.

பாஜகவில் பிரதமர் வேட்பாளர்களாக வருணிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜோ, மோடிதான் நாட்டின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தாமனவர் என ஒரேபோடு போட்டார்! மூத்த தலைவர் அத்வானியோ, குடும்பத்தில் இளையவர் திறமையானவராக இருந்து உயர் பதவிக்கு வந்தால் அதை மூத்தவர்கள் ஆதரிக்க வேண்டும்.. ஊக்கப்படுத்த வேண்டும் என்று அடுத்த அதிரடியை வீசினார்.

மோடியுடன் இணைந்து தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து விளையாடியவர் இன்னொரு பிரதமர் வேட்பாளராக சொல்லப்பட்ட அருண்ஜேட்லி! ஆக மோடிக்கு இப்பொழுது எதிராக இருப்பது கத்காரியும் அவரது ஆதரவாளர்களும்தான்!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முன்னைவிடை தற்போது மிகவும் முக்கியமானது. ஆமாம்.. உண்மையில் இந்த தேர்தல் மோடிக்கு ஒரு ஆசிட் டெஸ்ட்தான்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான கேசுபாய் பட்டேல் திடீரென தனிக்கட்சி தொடங்கி பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களைக் களம் இறக்கியிருக்கிறார். அவரது கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட பாஜகவின் வெற்றிக்கு எத்தனை தொகுதிகளில் வேட்டு வைப்பார் என்ற கலக்கமும் பாஜகவுக்குள் இருக்கிறது. பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் போது அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகப் போய்விடக் கூடிய சூழ்நிலையும் இருக்கிறது.

இந்த அக்னி பரீட்சையில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் பாரதிய ஜனதா கட்சியின் அசைக்க முடியாத பெரும் சக்தியாக அவர் உருவெடுத்துவிடுவார். நிச்சயம் தேசிய அரசியலில் நுழைந்தும் விடுவார். அப்போது வலுவான ஒரு சக்தியாக மோடி திகழ்வார். காங்கிரஸைப் போல் மாநில தலைவர்கள் வலுவான தலைவர்களாக உருவெடுப்பதை விரும்பாத கட்சி அல்ல பாஜக. அதனால் குஜராத்தில் மோடி பெறப் போகும் வெற்றி பாஜகவின் கத்காரி தரப்பு தலைவர்களை கலங்கத்தான் வைத்திருக்கிறது என்பது மிகையல்ல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+