நாட்டை உலுக்கிய டெல்லி பலாத்கார பயங்கரம் - குற்றவாளிகளில் 4 பேர் அடையாளம் தெரிந்தது

நேற்று இரவு டெல்லி அருகே முனிர்கா என்ற இடத்திலிருந்து ஒரு தனியார் பேருந்தில் ஒரு இளம் பெண்ணும், அவருடைய நண்பரும் கிளம்பினர். பாலம் விஹார் போவதற்காக அவர்கள் பஸ்சில் பயணித்தனர். பேருந்து கிளம்பி பத்து நிமிடம் ஆன நிலையில், பஸ்சில் இருந்த சிலர் அந்தப் பெண்ணைச் சீண்ட ஆரம்பித்தனர். இதைத் தட்டிக் கேட்ட அவரது நண்பரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து பஸ்சை விட்டு வெளியே தள்ளி விட்டனர்.
பின்னர் அந்தப் பெண்ணை ஐந்து பேரும் மிக்க கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அரைகுறையான நிலையில் அப்பெண்ணை பாலம் ஒன்றில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.
சம்பந்தப்பட்ட பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருபவர். அவருடன் வந்த நபர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். படம் பார்த்து விட்டு இருவரும் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. ஒரு பெண் முதல்வராக இருக்கும் டெல்லியிலேயே இந்த நிலையா என்று அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.
பஸ் கண்டுபிடிப்பு -4 பேரின் அடையாளம் தெரிந்தது
இந்த நிலையில் இந்த பயங்கரத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களில் நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பஸ்ஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய்டாவில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் வைத்து பஸ்சைக் கண்டுபிடித்துள்ளது போலீஸ்.
குற்றவாளிகள் யார் என்பது தெரிய வந்துள்ளதால் விரைவில் அவர்களைக் கைது செய்து விடுவோம் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் பலாத்கார தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் சிகிச்சை பெற்று வரும் சப்தர்ஜங் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications